புதுடெல்லி: திரிபுராவில் 102 பேரை உபா சட்டத்தில் கைது செய்திருப்பதன் மூலம் அரசு உண்மையை ஊமையாக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்து திரிபுராவின் பனிசாகரில் விஸ்வ இந்து பரிஷத் கடந்த 26ம் தேதி நடத்திய பேரணியில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இவை போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று மாநில அரசு கடந்த 29ம் தேதி தெரிவித்தது. இதற்கிடையே, இது தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டதாக கூறி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் மீது அசாம் மாநில போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.