ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து, 2 இடங்களில் தரைப்பாலம் உடைந்தது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது. மேலும், பிச்சாட்டூர் ஏரியில் இருந்தும் நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிய பாலம் கட்டப்படுவதால், போக்குவரத்திற்காக தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது.