உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம் பசுமைப்புரட்சி ஏற்பட்டதற்கு வேளாண் விஞ்ஞானிகளே காரணம்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

கோவை: பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு வேளாண் விஞ்ஞானிகள்தான் காரணம் என பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரான, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அவர் ஆராய்ச்சி படிப்பு முடித்த 88 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், மொத்தம் 2,602 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 45 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது விவசாயம் பாதித்து உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நாம் மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.

பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு வேளாண் விஞ்ஞானிகள்தான் காரணம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். விஞ்ஞானிகள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அளவில் நவீன யுத்திகளை கண்டறிய வேண்டும். வேளாண் கல்வியை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த 5 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விரைவில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடல் நலக்குறைவு காரணமாக பல்கலைக்கழக  இணைவேந்தரும், வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை.

Related Stories: