கோவை: பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு வேளாண் விஞ்ஞானிகள்தான் காரணம் என பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரான, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அவர் ஆராய்ச்சி படிப்பு முடித்த 88 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், மொத்தம் 2,602 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 45 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது விவசாயம் பாதித்து உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நாம் மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.