ஆர்யன் கானை தொடர்ந்து நடிகை ஜாமீனில் விடுதலை

மும்பை: போதை பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நடிகையும், வியாபாரியும் நேற்று விடுவிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டதால் அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அவரது நண்பர்கள் அர்பாஸ் மற்றும் நடிகை முன்முன் தமேச்சாவும் ஜாமீன் பெற்றுள்ளனர்.

சிறை நடைமுறைகள் முடிவுற்ற நிலையில் தற்போது அவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘நடிகை முன்முன் தமேச்சா மற்றும் வியாபாரி அர்பாஸ் மெர்ச்சண்ட் ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்டனர். மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு ஜாமீன் கொடுத்ததால், அதன் அடிப்படையில் முன்முன் தமேச்சா மும்பையின் பைகுல்லா பெண்கள் சிறையில் இருந்தும், அர்பாஸ் ஆர்தர் சாலை சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

ஆர்யன்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை, மேற்கண்ட இருவருக்கும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. நடிகை முன்முன் தமேச்சா, மத்திய பிரதேசம் செல்ல அனுமதிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் விண்ணப்பித்துள்ளார்’ என்றனர்.

Related Stories: