சிறுமிக்கு பாலியல் தொல்லை: 9 வருடங்களுக்கு பிறகு சென்னை சித்தப்பா கைது

தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா 9 வருடங்களுக்கு பின் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமியின் தாய் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என் சொந்த ஊர் சென்னை அண்ணா காலனி ஆகும். நாங்கள் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறோம். என் மகளுக்கு 16 வயது ஆகிறது. அவர் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு எனது மகள் 7 வயதில் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது மகளின் சித்தப்பா மகேஷ்(40) என்பவரும் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்திருந்தார். அவர் எனது மகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அப்போது புகார் செய்யவில்லை. ஆனால் தற்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு அடைந்த எனது மகள் எங்களிடம் நடந்த விவரங்களை கூறினார். இதனால் நான் புகார் கொடுக்க முடிவு செய்தேன்.

அதன்படியே தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். பாலியல் தொல்லை கொடுத்த மகேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னைக்கு சென்று மகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: