சைரன் வைத்த காரில் பவனி வந்த போலி ஐஏஎஸ் அதிகாரி பழநியில் சிக்கினார்: அடையாள அட்டைகள் பறிமுதல்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ், மலை அடிவாரத்தில் உள்ள ‘‘தண்டபாணி நிலையம்’’ விடுதி முன்பதிவு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சைரன் வைத்த காரில் 5 பேருடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். ஊழியர்களிடம், தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி, அடையாள அட்டையை காட்டி இலவசமாக அறைகளை வழங்குமாறு கேட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியே நேரடியாகவே வந்து அறை கேட்டது சந்தேகத்தை ஏற்படுத்தவே,  ஊழியர்கள், அடிவாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உஷாரான அந்த நபர் தப்பியோட முயற்சித்துள்ளார். கோயில் ஊழியர்கள் விரட்டி சென்று அவரை பிடித்து அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சிக்கியவர் மயிலாடுதுறையை சேர்ந்த குமார் (47). 8வது வரை மட்டுமே படித்த அவர், பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். பழைய காரை வாங்கி அதில் போலி நம்பர் மற்றும் சைரன் பொருத்தி, ஐஏஎஸ் அதிகாரி என பல இடங்களுக்கு சென்று ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. கும்பகோணத்தில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் வைத்திருப்பவரிடம் ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி, பழகி வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். தனது சைரன் வைத்த வாகனத்திலேயே அழைத்து செல்வதாக கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். அங்கு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி, சிறப்பு சலுகைகளை அனுபவித்துள்ளார். பழநி வந்தபோதுதான், வசமாக சிக்கிக் கொண்டார். போலீசார், குமாரை கைது செய்து அவரிடமிருந்த சைரன் வைத்த கார், போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வினையான சைரன் ஆசை

குமாரின் தந்தை சீனிவாசன் போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணிபுரிந்துள்ளார். அப்போது போக்குவரத்து கழகத்திற்கு சைரன் வைத்த காரில் நிர்வாக இயக்குநர்,  ஐஜி போன்றோர் வந்து சென்றுள்ளனர். இதை பார்த்த குமாருக்கும் இதுபோல் சைரன் வைத்த காரில் செல்ல ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், 8வது வரை மட்டுமே படித்திருந்ததால் சைரன் காரில் பவனி வருவது கனவாகி போனது. எனவே, பழைய காரை விலைக்கு வாங்கி சைரன் மாட்டி வலம் வந்துள்ளார்.

Related Stories: