மாடு முட்டி தூக்கி வீசியதில் பேருந்தில் சிக்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக்கில் சென்றபோது சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி தூக்கி வீசியதில் பேருந்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (எ) கருப்பசாமி(24). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு நேற்று மாலை இரவு உணவு கொண்டு சென்றுள்ளார். திருவள்ளூர் தலைமை அஞ்சலகம் எதிரே சென்றபோது குறுக்கே வந்த மாடு இருசக்கர வாகனத்தில் சென்ற கருப்பசாமியை முட்டி தூக்கி வீசியது. அப்போது, திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச்சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்தில் கருப்பசாமி மோதி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து சென்று கருப்புசாமி பிணத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: