தொழிலதிபர் வீட்டை உடைத்து 15 லட்சம் வைர நகை, 120 சவரன் கொள்ளை: 5 பேர் கைது

அண்ணாநகர்: அண்ணா நகர் மேற்கு  18வது பிரதான சாலையை சேர்ந்தவர் இளங்கோவன் (54). தொழிலதிபர். திருமங்கலம் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2ம் தேதி குடும்பத்துடன் வீட்டின் மேல்தளத்தில் உள்ள அறையில் தூங்கினார். மறுநாள் காலை அவர் தங்கியிருந்த அறைக்கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து, வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்திருந்தது. பீரோவில் இருந்த 120 சவரன், 15 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.புகாரின்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், திருமங்கலம் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் 8 தனிப்படையினர் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஓசூரில் ஒரு தனியார் விடுதியில் மர்ம கும்பல் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்த தனிப்படை போலீசார்   அங்கியிருந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அதில் 5 பேரை பிடித்து நேற்று அதிகாலை சென்னை திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனின் நெருங்கிய கூட்டாளியான தினகரன், ஊத்தாங்கரையை சேர்ந்த சிவா,மோகன், லோகேஷ், ராலி உள்பட 5 பேர் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 100 சவரனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினகரன் மீது, 30 திருட்டு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: