டெல்லி : நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்களுக்கும், பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், முதல் 85 நாளில் 10 கோடி, அடுத்த 45 நாளில் 20 கோடி, அடுத்த 29 நாளில் 30 கோடி, அடுத்த 24 நாளில் 40 கோடி, அடுத்த 20 நாளில் 50 கோடி டோஸ் என இந்த இலக்கு ஆகஸ்ட் 6ம் தேதி எட்டப்பட்டது. அதன்பின், அடுத்த 76 நாட்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த இலக்கு மொத்தத்தில் ஒன்பது மாதங்களில் எட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் தகுதியுடைய 75 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 31 சதவீதத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.