பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு முதல் முறையாக பொருத்தி சாதனை

துபாய்: பன்றி சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி, விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சோதனை முயற்சியாக மரபணு மாற்றப்பட்ட கால்சேப் என்றழைக்கப்படும் பன்றிகளின் உடலுறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த‌ பரிசோதனைகள் நடைபெற்று வந்தது நியூயார்க்கை சேர்ந்த என்.யு.யு. லாங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமரி  தலைமையில்  மருத்துவ நிபுணர்கள் பாதிக்கப்பட்ட அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று அவருக்கு பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தினர்.

பன்றியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் உடலுக்கு வெளியே வைத்து அவரின் மேல் காலில் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, 54 மணிநேரம் பராமரிக்கப்பட்டது. பன்றியின் சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் சீராக இயங்கியது. சோதனையின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாகவும் பன்றியின் சிறுநீரகம் சிறப்பாக செயலாற்றி மனித உடலின் கழிவுகளை வடிகட்டிய‌தாகவும்  தெரிவித்தனர். பன்றிகளுக்குள் மனித திசுக்கள் மற்றும் உறுப்புகளை வளர்த்து பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்துவது குறித்த பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது.இவை செயல்பாட்டுக்கு வந்தால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்படுவார்கள்.

Related Stories: