முத்துப்பேட்டை அருகே கந்தபரிச்சான் ஆற்றின் தண்ணீரை கடலுக்கு திறப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வழியாக கடலுக்கு செல்லும் கந்தபரிச்சான் ஆறு இப்பகுதியில் உள்ள வீரன்வயல், வடகாடு கல்லடிக்கொல்லை, அரமங்காடு, செங்காங்காடு கிராமங்களுக்கு நீர்ஆதாரத்தை பெற்று தருவதுடன் அப்பகுதி விவசாயிகள் மீனவர்களுக்கும் மிகவும் பயனாக இருந்து வருகிறது. அதனால் இந்த ஆற்றின் வழியாக கடலில் செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு தடுப்பணை (சட்ரஸ்) ஒன்றும் கட்டப்பட்டது.

இதனால் கந்தபரிச்சான் ஆற்றிலிருந்து கடலில் சென்ற தண்ணீர் தடுக்கப்பட்டு இப்பகுதி கிராமங்களுக்கு மிகப்பெரிய நீராதாரத்தை பெற்று தந்தது. இந்தநிலையில் தற்பொழுது ஆற்றில் வந்த தண்ணீரை ஒரு ஆள் மட்டத்திற்கு இப்பகுதியில் உள்ள தடுப்பணையில் சேமித்து வைத்திருந்த நிலையில் தடுப்பணை பகுதிக்கு மது அருந்த வரும் சிலர் தேங்கி இருக்கும் தண்ணீரை அடிக்கடி திறந்து விட்டு வருகின்றனர். இதனால் ஆற்றில் வரும் தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகி வருவதாக இப்பகுதி விவசாயிகள் மீனவர்கள் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி வேதரத்தினம் கூறுகையில், இப்பகுதி விவாயிகள் மீனவர;கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கந்தபரிச்சான் ஆற்றில் சில வருடங்களுக்கு முன்பு செங்காங்காடு கிராமம் அருகே தடுப்பணை (சட்ரஸ்) கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து சிலர் தடுப்பணை தண்ணீரை கடலுக்குள் திறந்துவிடுகின்றனர். இதனை இப்பகுதி கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: