தண்டராம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ₹2.84 லட்சம் காப்பர் கம்பிகள் திருட்டு

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதிஅருகே தென்பெண்ணை உழவர் உற்பத்தியாளர் பருப்பு மில் இயங்கி வந்தது. இந்த மில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மூடப்பட்டது. மேலும், அப்பகுதியில் இயங்கிய மில் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்வாரிய துறையினர் அங்கு டிரான்ஸ்பார்மர் அமைத்து அதன்மூலம் மின்சாரம் வழங்கி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அவ்வழியாக சென்ற பொதுமக்கள், கம்பத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை கண்டு மின்வாரிய துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை தலைமையிலான ஊழியர்கள் வந்து பார்த்தனர். அப்போது டிரான்ஸ்பார்மருக்கு செல்லக்கூடிய மின்வயரை துண்டித்து, டிரான்ஸ்பார்மரை உடைத்து கீழே தள்ளி அதில் உள்ள காப்பர் காயிலை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதையடுத்து அண்ணாதுரை தண்டராம்பட்டு காவல் நிலையத்தில், ₹2 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: