நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தப்பிய T-23 புலியின் உருவம் 8 நாட்களுக்கு பிறகு தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று 4 மனிதர்களை கொன்றது. இதனால் புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூர் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க, 17 நாட்களாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கூடலூரில் தேடுதல் பணியின்போது தேயிலைத் தோட்டத்தில் இரண்டு முறை அந்த புலி தென்பட்டும், கால்நடை மருத்துவர்களால் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்த முடியாமல்போனது. 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள், நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள், பரண்கள், சிறப்பு அதிரடிப் படையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கேரள, கர்நாடக வனத்துறை எனப் பெரும் பட்டாளமே புலியை தேடி வந்தது.