புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் 19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் பல பள்ளிகள் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை, உலக வங்கி மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையை உலக கல்வி மீட்பு பதிவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ‘உலகளவில் 200 நாடுகளில் 80 சதவீத பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதில் 54%பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு நேரிடையாக வந்து பாடம் நடத்துகின்றனர். 34 சதவீத பள்ளிகளில் நேரிடை வகுப்பு, ஆன்லைன் வகுப்பு இரண்டும் கலந்து நடந்து வருகின்றன.