அக்கா கணவர் வாங்கிய கடனுக்கு பாஸ்ட்புட் கடை உரிமையாளரை கடத்தி வீட்டை எழுதி வாங்கிய 4 பேர் கைது

சென்னை: அக்கா கணவர் வாங்கிய கடனுக்காக பாஸ்ட்புட் கடை உரிமையாளரை கடத்தி, வீட்டை எழுதி வாங்கிய 4  பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி நெஞ்சாலையை சேர்ந்த சஜின் (32), தனது வீட்டின் தரை தளத்தில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இவரது கடைக்கு வந்த 7 பேர், உங்கள் அக்கா கணவர் கிருஸ்துராஜ் எங்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக உள்ளார். அவர் இருக்கும் இடத்தை காட்ட வேண்டும், எனக்கூறி சஜினை கடத்தி சென்றனர். இதுபற்றி, கடையின் ஊழியர் சைபுல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சஜினின் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது, புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சஜின் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அவரை மீட்டனர். விசாரணையில், புதுப்பேட்டை முனியப்பபிள்ளை தெருவை சேர்ந்த ராஜா உசேன் (53), கொளத்தூர் பெரியார் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த முகமது சுல்தான் (58), புதுப்பேட்டை மீர்மதன் அலி தெருவை சேர்ந்த முகமது அக்கீம் (35), புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்த மோகன்ராஜ் (42) ஆகியோர், சஜினை கடத்தியது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணையில், சஜினின் அக்கா கணவர் கிருஸ்துராஜா பைனான்ஸ் நிறுவனம் நடத்தி, பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதன்படி, மேற்கண்ட நபர்களிடமும் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனுக்கு வட்டியும் கொடுக்கவிலலை. பணத்தையும் திரும்ப கொடுக்க வில்லை. இதனால் பணத்தை திரும்ப பெறும் நோக்கில், சஜினை கடத்தி, வீட்டு பத்திரத்தை எழுதி வாங்கியது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அபுபக்கர், அமீன், தியாகு ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: