காரியாபட்டி: காரியாபட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஓடுகளை கண்டுபிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிழவனேரியில் முதுமக்கள் தாழிகள் அதிகமாக இருப்பதாக, வரலாற்று ஆர்வலர் பார்த்திபக்கண்ணன் அளித்த தகவல்படி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தாமரைக்கண்ணன், பாண்டிய நாடு பண்பட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கிழவனேரி கிராமத்தில் ஊரின் மேற்கு பகுதியில் பெருஊருணி என்னும் பெரிய நீர்நிலை உள்ளது. இதன் அருகே, சிறு ஓடையை அடுத்து மிகப்பெரிய காட்டுபகுதி உள்ளது. இப்பகுதியில், மூதாதையரின் வரலாற்றை கூறும் தொல்லியல் எச்சங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இந்த பகுதியில் 2 முதல் 3 கி.மீ சுற்றளவிற்கு முதுமக்கள் தாழியின் ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. பெருமழையில் ஏற்பட்ட மண் அரிப்பால், முழுமையாக வெளியே தெரிந்த ஒரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து பார்த்தபோது, நமது மூதாதையரின் முழுமையான ஒரு பல்லும் முற்றிலும் சிதைந்த எலும்புகளும் கிடைத்துள்ளன.