சேலம்:சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மத்திய மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பின்னர், நிருபர்களிடம் குமாரசாமி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஆலைகள் முழுமையாக செயல்படாததால், லாரிகளுக்கான வாடகை போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் செலவீனங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 15ம் தேதி முதல், லாரிகளுக்கான ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, அட்டிக்கூலி மற்றும் மாமூல் போன்றவற்றை, சரக்கு உரிமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.