புதுடெல்லி: நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில்,‘‘வலிமையான நாடு, விரைவான தடுப்பூசி, இந்தியாவில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா புதிய அடையாளத்தை அடைந்துள்ளது. இந்தியாவை இதேபோன்று பாதுகாப்பாக வைத்திருப்போம். கொரோனாவுக்கு எதிராக போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.