புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் லோக் ஜனசக்தி கட்சி தொடங்கப்பட்டது. கூட்டணி மூலம் காங்கிரஸ், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசில் அக்கட்சி மாறி மாறி அமைச்சர் பதவி பெற்று வந்தது. கடந்தாண்டு அக்டோபரில் ராம்விலாஸ் பஸ்வான் இறந்ததை அடுத்து, கட்சியை கைப்பற்றுவதில் அவரது மகனும் எம்பி.யுமான சிராக் பஸ்வான், அவரது சித்தப்பா பசுபதி குமார் பராசுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பசுபதி ஆதரவாளர்கள் சிராக்கை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி கடிதம் எழுதினர். இதனால் அப்பதவிக்கு பசுபதி அங்கீகரிக்கப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிராக்கின் ஆதரவாளர்கள் கட்சி கூட்டத்தை கூட்டி பசுபதி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினர்.