உள்கட்சி பூசல் முடியும் வரை லோக் ஜனசக்தி சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் லோக் ஜனசக்தி கட்சி தொடங்கப்பட்டது. கூட்டணி மூலம் காங்கிரஸ், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசில் அக்கட்சி மாறி மாறி அமைச்சர் பதவி பெற்று வந்தது. கடந்தாண்டு அக்டோபரில் ராம்விலாஸ் பஸ்வான் இறந்ததை அடுத்து, கட்சியை கைப்பற்றுவதில் அவரது மகனும் எம்பி.யுமான சிராக் பஸ்வான், அவரது சித்தப்பா பசுபதி குமார் பராசுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பசுபதி ஆதரவாளர்கள் சிராக்கை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி கடிதம் எழுதினர். இதனால் அப்பதவிக்கு பசுபதி அங்கீகரிக்கப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிராக்கின் ஆதரவாளர்கள் கட்சி கூட்டத்தை கூட்டி பசுபதி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினர்.

இந்த மோதல் நீடித்த போது, ஒன்றிய அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு பிறகு, விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களில் பசுபதி குமார் பராசும் ஒருவராவார். அவருக்கு ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிராக், பசுபதி பிரிவினர் இடையிலான உள்கட்சி பூசல் முடியும் வரை, லோக் ஜனசக்தி கட்சியின் பங்களா சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் அதனை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: