வாஷிங்டன்: பயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் இருப்பது கவலையளிக்கிறது என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாள ஜான் கெர்பி தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கா எப்போதுமே பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறது. பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா தன் அக்கறையை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தானால் ஆப்கன் எல்லையில் இப்போதும் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும், பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தானுக்கும் பங்கு இருக்கிறது. அதனால் எங்கள் கவலையை பாக்., தலைவர்களுடன் வெளிப்படையாக பேச விரும்புகிறோம்.
எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதை அந்நாடு உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஆப்கனில் இருந்து தங்களுக்கு எதிராக தெஹ்ரிக் இ தலிபான் போன்ற அமைப்புகள் செயல்பட தூண்டிவிடப் படுகின்றன என, பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.