ராஜஸ்தானை எளிதாக வென்றது ஆர்சிபி

துபாய்: ராஜஸ்தான் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் 58 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஸ்வால் 31 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அடுத்து 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

விராட் கோஹ்லி 25 ரன் (20 பந்து), படிக்கல் 22 ரன் (17 பந்து) எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தனர். ஒருமுனையில் பரத் நிதானமாக ஆடி, மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். பரத் 44 ரன் (35 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 30 பந்தில் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ஆர்சிபி 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 50 ரன் (30 பந்து, 1 சிக்சர், 6 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்றைய போட்டியில் ஐதராபாத், சென்னை அணிகள் மோதுகின்றன.

Related Stories: