கற்பக விநாயகா கல்லூரியில் இனோவேஷன் ஆய்வகம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் அரிய வகை கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கான பல்வேறு வசதிகளை கொண்ட இனோவேஷன் ஆய்வக திறப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். டிஜிபி சுனில்குமார் சிங் கலந்துகொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, முதல்வர் காசிநாதன் பாண்டியன், புல முதல்வர் சுப்பாராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அப்போது, பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளான வரவேற்கும் ரோபோ, மருத்துவ கழிவுகளை அகற்றும் ரோபோ, சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ உள்பட பல்வேறு அரிய வகை படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் தொழில் சார்ந்த புதுமையான ஆக்கக் கூறுகள் பற்றி கலந்துரையாடினார்.

Related Stories: