வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு தரப்பட்ட காக்டெயில் ஆன்டிபாடி மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், அதிபர் தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கேஸிர்விர்மாப், இம்டெவிமாப் ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்து தரப்பட்டது. இந்த மருந்து, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் செயற்கை ஆன்டிபாடிகளை உருவாக்கும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி வகை மருந்தாகும். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட டிரம்ப் விரைவில் குணமடைந்தார்.