ஜெனீவா: காற்றுமாசு காரணமாக உலகளவில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், லட்சக்கணக்கானவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை இழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இதையடுத்து காற்றில் கலந்துள்ள மாசுபாட்டினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் விதமாக 2005ம் ஆண்டிற்கு பிறகு காற்று மாசினை குறைப்பதற்கான வழிகாட்டுதலை WHO வெளியிட்டிருக்கிறது. 194 உறுப்பு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கும் இந்நிறுவனம், எரிபொருள் பயன்பாட்டால் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் முந்தைய பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை மேலும் குறைத்திருக்கிறது.
மாசு காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மரணங்களின் விகிதம் அதிகரித்து வருவதாக WHO எச்சரித்துள்ளது. புதிய வழிகாட்டுதலின் கீழ் பி.எம். 2.5 நிலைக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராமில் இருந்து 5 மைக்ரோ கிராமாக WHO குறைத்திருக்கிறது. மேலும் பி.எம். 10த்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பு, 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோ கிராமாக குறைக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சி எதிரொலியாக பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்து வருவதால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் காற்றுமாசினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக WHO-இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.