ஏம்பலம் தொகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பாகூர் :  ஏம்பலம் தொகுதியில் உள்ள பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருமாம்பாக்கத்தில் நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், லட்சுமிகாந்தன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு, ஏம்பலம் தொகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 9 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு சமுதாய முதலீட்டு  நிதியாக ரூ.16 லட்சம், நலிவுற்றோர் குறைப்பு நிதியாக ரூ.13.5 லட்சம், சமுதாய மேம்பாட்டு நிதியாக ரூ.2 லட்சம், 30 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.4.5 லட்சம், 30 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் ரூ.1.67 கோடி என மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினர்.

தொடர்ந்து,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 48 பேருக்கு ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சத்தை லட்சுமிகாந்தன் எம்எல்ஏ வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்,  இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், வட்டார விரிவாக்க அதிகாரிகள் ராஜீ,  சுப்ரமணியன், கார்த்திகேயன், தனசேகர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: