மகனுக்கு காது குத்து விழா முடிந்ததும் ஜி.ஹெச் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: திருச்சியில் சோகம்

திருச்சி: மகனுக்கு காது குத்து விழா முடிந்து வீடு திரும்பிய பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவரை, விழாவில் உறவினர்கள் கேட்டதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலை பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் சஞ்சினி(31), டாக்டர். இவரது கணவர் கோகுல். இவரும் டாக்டராக உள்ளார்.  இவர்களுக்கு 2018ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஜிஷ்னு என்ற மகன் உள்ளார்.

தொட்டியத்தில் கோகுல் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். சஞ்சினி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக 4 மாதங்களாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் மகன் ஜிஷ்னுக்கு காது குத்து விழாவை சஞ்சினி நேற்று காலை நடத்தினார். இந்த விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சஞ்சினியிடம் உனது கணவர் எங்கே என்று கேட்டனர்.

இதனால் மன உளைச்சலில் சஞ்சினி காணப்பட்டார். ேநற்று மாலை காது குத்து விழா முடிந்து தனது வீட்டுக்கு சஞ்சினி சென்றார். அப்போதும் கணவர் எங்கே என்று உறவினர்கள் கேட்டனர்.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சஞ்சினி, நேற்று இரவு தனது அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை உறவினர்கள் எழுந்து பார்த்தபோது சஞ்சினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சஞ்சினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: