சிவகாசியில் சிறுமி பலாத்காரம் பிறந்த குழந்தையை நரபலி கொடுக்க முயற்சியா? வளர்ப்பு தந்தை கைது

சிவகாசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி பகுதியில் கடந்த 13ம் தேதி இரவு, சிவகாசி பாம்பாட்டி சித்தர்கோயில் சாமியார் வாசுதேவன் பூஜையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சிவகாசியை சேர்ந்த கங்காதரன், ஒரு பெண், 2 சிறுமிகள், ஒரு கைக்குழந்தை இருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையை நரபலி கொடுக்க முயல்வதாக நினைத்து ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணைக்கு பிறகு  விடுவித்துள்ளனர். எனினும் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்து, விருதுநகர் எஸ்பிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

இதில் கிடைத்த திடுக்கிடும் தகவல் வருமாறு: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த 37 வயது பெண் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக 15, 10 வயது மகள்களுடன் தனியாக வசித்துள்ளார். பின்னர் வீட்டருகே வசிக்கும் கங்காதரனை (25) 2வது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு 15 வயது மகள் கர்ப்பமாகவே விசாரித்தபோது, கங்காதரன்தான் காரணம், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையுடன் சாமியாரிடம் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார், கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். கைதான கங்காதரன், சாமியார் வாசுதேவனின் மகன். தந்தைக்கு உதவியாக கோயிலில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: