சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மானிய கோரிக்கையின் மீது, கடந்த 25-8-2021 அன்று நடந்த விவாதத்தின்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி, எவ்வாறு 2 லட்சத்து 42 ஆயிரத்து 783 பேருக்கு, 2 ஆயிரத்து 749 கோடியே 10 லட்சம் ரூபாய் தவறாக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கி பேசினார்.
அந்த விவாதத்தின்போது, தொடர்ந்து பேசிய அமைச்சர், அவ்வாறான தவறுகள் நகை கடன்களிலும் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வகையில் நடைபெற்றுள்ளன என்பதையும் விளக்கினார். எனவே நகை கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று இந்த அவையிலே தெரிவித்திருந்தார். அதன்படி, அனைத்து நகை கடன்கள் பற்றிய முழு புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.அதனடிப்படையில், நகை கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த நகை கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து, தகுதியான நபர்களை கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகை கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவ்வாறு புள்ளி விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகை கடன்கள் வழங்கப்பட்டதிலும், பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகை கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 பவுனுக்கும் குறைவாக நகை கடன் பெற்றவர்களில் சில நேர்வுகளில் தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் இருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள், தவறாக ஏஏஒய் (அந்தியோதயா அன்ன யோஜன) குடும்ப அட்டையை பெற்று, அவற்றை பயன்படுத்தி நகை கடன் பெற்றவர்கள் மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விவரமான வழிமுறைகளை கூட்டுறவு துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும். மேற்கூறியவாறு, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகை கடன்களை தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் கோடி ஆகும் என தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும். கூட்டுறவு நிறுவனங்கள் இனி நேர்மையாக, திறமையாக, ஏழை எளிய விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறும் வகையில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான கணினிமயமாக்கல் கோர் பேங்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு, எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தி செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.* முறைகேட்டில் ஈடுபட்ட சங்கம் மீது நடவடிக்கைகூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன், முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு, நகை கடன்களை பெற்றிருப்பதும் சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின் மீது தகுந்த நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.