சண்டிகர்: பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலின் போது கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மாநில தலைவர் சித்துவின் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பாக பேசியுள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கும் இடையே மோதல்கள் நீடிக்கின்றன. அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், சித்துவின் ஆதரவு எம்எல்ஏ சுர்ஜித் திமான் என்பவர், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் தலைமையில் போட்டியிட மாட்டேன். மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று கூறியுள்ளார்.