சென்னை: பழவேற்காடு பகுதியில் அதானிக்கு சொந்தமான துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதிகளில் கிடைக்கக் கூடிய நண்டு, மீன், இறால் போன்றவற்றை காண்பித்து இவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் பழவேற்காடு மீனவ கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, வீரம்மாள் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: மிகப் புகழ் பெற்ற மீன் வளங்கள் அதிகம் கொண்ட பகுதி பழவேற்காடு இங்கு இயற்கை சூழ்ந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது. இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு அதிக சுவையும் தனிச்சிறப்பு உள்ளது. மேலும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மீன்கள், இறால், நண்டு போன்றவை பழவேற்காடு பகுதியில் கிடைக்கிறது. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித் தொழில் ஆகும்.