டி20 உலக கோப்பை அணியில் இடமில்லை: யார்க்கர் கிங் நடராஜன் வாய்ப்பை பறித்த `காயம்’

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் யார்க்கர் கிங் நடராஜன் சேர்க்கப்படாததற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல்  நவம்பர் 4-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், அதற்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டர் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், இஷான்கிஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், ராகுல் சஹார்,வருண் சக்கரவர்த்தி,  உள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் யார்க்கர் கிங் எனப்படும் நட்சத்திர பவுலர் டி.நடராஜன் சேர்க்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது. நடராஜன் காயத்தில் இருந்து முழுவதுமாக மீளாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய டி.நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் தனது திறமையை நிரூபித்தார். இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என்று பலரும் கூறி வந்த நிலையில் திடீரென முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் 2 போட்டிகளுடன் வெளியேறினார். பின்னர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நடராஜன், நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர், பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் எப்படியும் பங்கேற்பார் என கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக சோபித்தாலும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இதனால் நடராஜனின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: