சின்னாளபட்டி: திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பூத்துக்குலுங்கும் அரளி பூக்கள் வாகனங்களில் செல்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரளி பூக்களை பறித்து செல்கின்றனர். தேசிய 4 வழிச்சாலைகளில், இரவு நேரங்களில் எதிர்ப்புற சாலையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் வாகன ஓட்டுனர்களுக்கு கண் கூச்சம் ஏற்பட்டு விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு கண் கூச செய்யும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புசுவரில் அரளி செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.