வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட 71 வருவாய் கிராமங்களில் நடப்பு ஆண்டு சுமார் 8 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வலங்கைமான் தாலுகாவில் ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், ஆவூர், கோவிந்தகுடி உள்ளிட்ட 71 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் சுள்ளன் ஆறு மூலம் சுமார் 14,273 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளை விட வலங்கைமான் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பளவு 4 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 6 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்ததை அடுத்து நடப்பு சம்பா பருவத்திற்கான இலக்கு 10 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து சுமார் 8,000 ஹெக்டேர் என குறைத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிக அளவில் தேங்கியுள்ள மழை நீரை தாக்குப்பிடித்து நன்கு வளரக்கூடிய நீண்டகால ரகத்தை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கி செப்.15 வரை நீண்டகால ரகமான சிஆர் 1009 சப், ஏடிடி 51 ஆகிய ரகங்கள் நாற்று விடும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது., செப்.15க்கு பிறகு மத்திய கால ரகமான ஸ்வர்ணா சப், கோ ஆர்50, ஐஆர் 20 போன்ற 135 நாள் வயதுடைய நாற்றுகளை தயார் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.சம்பா சாகுபடியில் இயந்திரங்கள் புகை நடவு நேரடி விதைப்பு என பல்வேறு முறைகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
ஆட்கள் பற்றாக்குறை நிர்வாக செலவு மற்றும் நீர் சிக்கனம் உள்ளிட்ட காரணங்களை கருத்தில்கொண்டு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நேரடி விதைப்பில் வயலினை நன்கு புழுதி உழவு செய்து இதை நல்லெண்ணெய் ஊற வைக்காமல் நேரடியாக விதைப்பு செய்து வருகின்றனர். வலங்கைமான் அடுத்த மருவத்தூர், கண்டியூர், மாத்தூர், ராஜேந்திரநல்லூர், நல்லம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.