புதுடெல்லி: பருவநிலை மாற்றம் குறித்து உலகளாவிய முறையில் சமூகத்தில் உடனடியாக முழு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று இயற்கை, சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்தும், வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர். வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்தின் கிளாஸ்கோவ் நகரில் பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச உச்சி மாநாடு ஐநா பொதுசபை சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல மருத்துவ இதழான லான்செட், உள்பட 220 இதழ்களில் வெளியான கட்டுரையில், இந்திய தேசிய மருத்துவ இதழின் தலைமை பத்திரிகை ஆசிரியரும், கட்டுரையின் இணை ஆசிரியருமான பியூஷ் சாஹ்னி கூறியிருப்பதாவது: உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் இயற்கை பேரழிவுகளால் பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கபட்டு மனிதர்கள், வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, உலக நாடுகள் தற்போதாவது, விழித்து கொண்டு நாடுகளின் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.