மும்பை: ரூ.100 கோடி மாமூல் வசூல் வழக்கில் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் அறிவிப்பு வெளிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அப்போதைய போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர், மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் (தேசியவாத காங்கிரஸ்) அனில் தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் பணம் வசூலிக்க சொன்னதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பாம்பே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனில் தேஷ்மக்கின் தனி செயலாளர் மற்றும் தனி உதவியாளரை ஏற்கனவே சிபிஐ கைது செய்தது.