உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி, சாலவாக்கம், படூர், குருமஞ்சேரி, களியாம்பூண்டி, படூர் மற்றும் உத்திரமேரூர் உள்ளிட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 6 ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைப்பெற்றது. இதில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் என 2,286 பேர் ஆர்வத்தோடு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.