உத்தமபாளையம் அருகே ரூ.20 லட்சம் கள்ளநோட்டுடன் 2 பேர் பிடிபட்டனர்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். வெள்ளைக்கரடு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே, இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களது பையை சோதனை செய்ததில் ரூ.2000, 500, 100 என கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

அவர்கள் கம்பம் டிடிவி.தினகரன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் (42), ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் (43) என தெரிந்தது. இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.20,2,450 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது, கேரளாவில் சமீபத்தில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: