சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார் போக்சோ வழக்கில், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  நடக்கிறது.  இதற்கிடையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2  போக்சோ வழங்குகள் பதிவு செய்யபட்டன. அதிலும் அவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவை  செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன்னிலையில்  நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 17ம் தேதிவரை அவரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிவசங்கர் பாபாவை, போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றிசென்றனர். அப்போது,  நீதிமன்ற வளாகத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள், வாகனத்தை மறித்து போலீசாரை கண்டித்தும், சிவசங்கர் பாபாவை விரைவில் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் போலீசாருக்கும், பாபா ஆதரவாளர்களுக்கும் இடையே, கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: