காஞ்சிபுரம்: மத்திய அரசின் புதிய விதிகளான ஹால்மார்க் அடையாள எண் பெறுவது குறித்த விதிகளை கைவிடக்கோரி காஞ்சிபுரம் தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கடந்த ஓராண்டாக தங்க நகை வியாபாரிகள் அனைவரும் ஹால்மார்க் முத்திரை பெற்று தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என புதிய ஹால்மார்க் விதிகளை அமல்படுத்தியுள்ளது.ஆனால், தங்க நகைகளுக்கு அடையாள எண் பதிவிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தங்கநகைகள் அடையாள எண் பதிவிட போதிய வசதிகள் இல்லை என தங்க நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் கூறி வந்தனர். மேலும், மத்திய அரசின் விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.