கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா 2வது அலையின் ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் பொது போக்குவரத்து நடந்து வருவதால், பொதுமக்கள் பலரும் குடும்பமாக திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்றுமுதல் தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்ததோடு, கன்னியாகுமரியின் இயற்கை எழிலையும் ரசித்தனர்.