தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதால் வன்முறை மேகாலயா முதல்வர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஷில்லாங்: மேகாலயாவில் முதல்வர் வீட்டின் மீது நள்ளிரவில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயாவில் தனி நாடு கோரும் தடை செய்யப்பட்ட ஆயுத குழுக்கள் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக முன்னாள் தீவிரவாதியான செஸ்டர்பீல்ட் தாங்கியூ என்பவரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போலீசார் மீது அவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதனால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஷில்லாங்கில் வன்முறை வெடித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, ஷில்லாங் மற்றும் அதனை சுற்றியுள்ள காசி ஹில்ஸ், வெஸ்ட் காசி ஹில்ஸ், தென்மேற்கு காசி ஹில்ஸ் மற்றும் ரிபாய் மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் கான்ராட் கே சங்மா வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 10.15 மணியளவில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீட்டின் மீது வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்புறம் ஒன்றும், பின்புறம் ஒரு பெட்ரோல் குண்டும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே முன்னாள் தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய்  கடும் கண்டனம் தெரிவித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories: