சட்டீஸ்கர், மகாராஷ்டிராவில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் 40 சதவீதம் பெண்கள்: 60 வயதிலும் ஏகே 47 துப்பாக்கியுடன் சுற்றும் சுஜாதா

புதுடெல்லி:  சட்டீஸ்கர், மகராஷ்டிராவில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களின் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன. இவர்களை ஒடுக்குவதற்காக சிறப்பு பாதுகாப்பு படைகள் உருவாக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்்கியால் சுட்டும், குண்டுகளை வைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு படைகளின் நடவடிக்கை காரணமாக, இம்மாநிலங்களில் நக்சல்களின் நடவடிக்கைகள் பெருமளவு முடக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் 40 சதவீதம் பெண்கள் இடம் பெற்று இருப்பதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகி இருக்கிறது.  

இது குறித்து சட்டீஸ்கரின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சட்டீஸ்கர். மகராஷ்டிராவில் செயல்படும் நக்சல் அமைப்புகளில் உள்ளவர்களில் 40 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர். உதாரணத்துக்கு சட்டீஸ்கரில் காவல் துறையின் புள்ளி விவரத்தின்படி, தெற்கு பாஸ்டர் பகுதியில் மட்டும் 653 நக்சல்கள் பிரிவுகள் உள்ளன. இதில், 310 பெண்கள் உள்ளனர். மேற்கு பாஸ்டர் பகுதியில் உள்ள 169 பிரிவில் 420 பெண்கள் உள்ளனர். வடக்கு பாஸ்டரில் உள்ள 106 பிரிவில் 226 பெண்கள் இருக்கின்றனர். சிலர் வயதான பிறகும் தீவிரவாதத்தை கைவிடுவதில்லை. தெற்கு பாஸ்டர் பகுதியில் உள்ளவர் சுஜாதா. 65 வயதான இவர் இப்போதும் ஏகே 47 துப்பாக்கியை சுமந்து திரிகிறார். 6 மொழிகள் பேசும் திறமை கொண்டவர். தனது கணவரின் மூலம் நக்சல் ஆனவர். இதுபோல், பல பெண்கள் உள்ளனர்,’’ என்றார். 

Related Stories: