கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி ஆசாமி பரிதாப பலி

ஊத்துகோட்டை: திருவள்ளூர் திருவள்ளுவபுரத்தை சேர்ந்தவர் சின்னராசு(42). இவர் சாலை ஓரங்களில் குப்பை சேகரித்து கடையில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர்கள் தினேஷ், குமார், பார்த்திபன் ஆகியோர் சேர்ந்து பெரியபாளையம் அருகே மெய்யூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் நேற்று குளிக்க சென்றனர். நண்பர்கள் கரையில் அமர்ந்து இருந்தனர். இந்நிலையில், சின்னராசு மட்டும் ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது, திடீரென அவர் ஆற்றில் மூழ்கினார். இதையறிந்த, நண்பர்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் திருவள்ளூர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சின்னராசுவை சடலமாக மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவனைக்கு, அவரது சடலத்தை அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: