திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாதம் மற்றும் ஓண பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை(15ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை(16ம் தேதி) முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 19ம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் 23ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.