காஞ்சிபுரம் போலீசார் அஞ்சலி பல்வேறு வழக்குகளுக்கு உதவிய மோப்ப நாய் மரணம்: 21 குண்டுகள் முழங்க நல் அடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றிய, 12 வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி நாய் திடீரென இறந்தது. அதன் உடலை 21 குண்டுகள் முழங்க போலீசார் அடக்கம் செய்தனர். காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அஜய் என்ற மோப்பநாய் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியது. கடந்த சில நாட்களுக்கு முன் வயது மூப்பு, நோய் தாக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி மோப்ப நாய் அஜய் திடீரனெ இறந்தது. இதனையடுத்து மோப்பநாய் அஜய் உடலுக்கு, காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் மற்றும் அதிகாரிகள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 21 குண்டுகள் முழங்க  காஞ்சிபுரம் மோப்ப நாய்கள் பராமரிக்கும் இடத்திலேயே நல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தை சேர்ந்த அஜய், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்பட 245 குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி பல துப்பு கொடுத்துள்ளது. மேலும் 12 வழக்குகளில் துப்பு கொடுத்து குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்ல பிராணியாக வளர்ந்த அஜய், குடல் புழு அதிகமாகியதால், நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள், பரிசுகளை பெற்றுள்ளது.  2015ம்  ஆண்டு சென்னையில் நடந்த மாநில துப்பறியும் நாய்களுக்கான பணி திறன் போட்டியில் 4வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த அஜய் இறந்தது போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: