காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றிய, 12 வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி நாய் திடீரென இறந்தது. அதன் உடலை 21 குண்டுகள் முழங்க போலீசார் அடக்கம் செய்தனர். காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அஜய் என்ற மோப்பநாய் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியது. கடந்த சில நாட்களுக்கு முன் வயது மூப்பு, நோய் தாக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி மோப்ப நாய் அஜய் திடீரனெ இறந்தது. இதனையடுத்து மோப்பநாய் அஜய் உடலுக்கு, காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் மற்றும் அதிகாரிகள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 21 குண்டுகள் முழங்க காஞ்சிபுரம் மோப்ப நாய்கள் பராமரிக்கும் இடத்திலேயே நல் அடக்கம் செய்யப்பட்டது.