ஊட்டி: ஊட்டி - மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் பல இடங்களில் செர்ரி மலர்கள் பூத்துள்ளதால், இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் நீலகிரி மாவட்டத்திலும் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது.
ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் அதிகளவு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் மலர்கள் என்பதால், ஜப்பான் நாட்டில் இந்த மலர் தேசிய மலராக இருந்து வருகிறது. குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், குறிப்பாக சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக அக்டோபர் மாதங்களில் பூக்கும். தொடர்ந்து பனிக்காலமான நான்கு மாதம் இந்த மலர்களை காண முடியும். ஆனால், இம்முறை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த செர்ரி மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது. வேலிவியூ, சாம்ராஜ், கைகாட்டி, தேவர்சோலை மற்றும் லவ்டேல் போன்ற பகுதிகளில் பூத்துள்ளன. முன்னதாகவே பூத்துள்ள இந்த அரிய வகை மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.