வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நூதன முறையில் பைக்குகளில் மணல் கடத்தி, வாட்ஸ் அப் குழு அமைத்து டோர் டெலிவரியில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில். பகல் நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் இரவு முழுவதும் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.
வாணியம்பாடி நகர பகுதிகளிலும், அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், கொடையாஞ்சி பகுதிகளில் உள்ள பாலாற்றில் இருந்து பலர் மூட்டைகளாக கட்டி பைக்குகளில் கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர். இதற்காக வாட்ஸ் அப் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இணைந்து மணல் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடு தேடி மணல் மூட்டை டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இதில் ஒரு மணல் மூட்டை ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு மாட்டுவண்டி மணல் 1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் டிப்பர் லாரி, டிராக்டர் மூலமாகவும் தற்போது மணல் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.