கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மூன்று பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கருர் மாவட்டம் புலியுர் வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(55). இவரின் மகன் ரமேஷ்(32). கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த இருவரையும் போலீசார் சோதனையிட்ட போது, அவர்களது பையில் பாட்டிலில் மண்ணெண்ணெயை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தங்கள் நிலத்தை சிலர் ஆக்ரமித்து கட்டிடம் கட்டி வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இருவரும் தீக்குளிக்கும் நோக்கத்தில் வந்ததாக தெரிவித்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது, அலுவலக நுழைவு வாயில் பகுதியில் இரண்டு பெண்கள் தங்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மண்ணெண்ணெயை பறித்த போலீசார், சிறிய தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை அவர்கள் இருவர் மீதும் ஊற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், கரூர் மாவட்டம் கட்டளை நத்தமேடு பகுதியை சேர்ந்த மல்லிகா(50), உடன் வந்த பெண் அவரின் உறவினர் வளர்மதி(45) என்பது தெரியவந்தது.மல்லிகாவும், அவரது கணவரும் சுயமாக சம்பாதித்த சொத்தில அவர் கணவரின் உறவினர் ஒருவர் சொத்தில் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மல்லிகாவுக்கு சொந்தமான நிலத்தில் கணவரின் உறவினர் சோளத்தட்டைகளை அறுத்து சென்றதாகவும் இது குறித்து புகார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இந்த முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தனர். மல்லிகா, வளர்மதி, கோவிந்தம்மாள், ரமேஷ் ஆகியோரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, கோவிந்தம்மாள், ரமேஷ் ஆகியோரை விசாரணை நடத்தி அனுப்பி விட்டு, மல்லிகா, வளர்மதி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த தீக்குளிப்பு முயற்சி காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: