திருவொற்றியூர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை செங்குன்றம் நோக்கி மாநகர பேருந்து (த.எ.114) புறப்பட்டது. டிரைவர் சேகர் (45) பேருந்தை ஓட்டினார். இதில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். காலை 4.30 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகே பேருந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால தடுப்பு சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் பயணிகள் 8 பேர் படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.