ஊத்துக்கோட்டை: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கூறுகையில்: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை அறிவிக்கும். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 9.1.2020ல் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளார்கள். மற்ற ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இத்தகைய பாகுபாடான செயல்பாடுகள் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.